வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்காக வாக்காளர்கள் பேனா அல்லது பென்சிலை பயன்படுத்தலாம் என்று Elections Canada தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் சிலவற்றில் வாக்காளர்கள் அடையாளமிடுவதற்காக பென்சிலையே பயன்படுத்த வேண்டும் என தவறான பதிவுகள் வெளியிடப்படுகின்றன.
அதேபோன்று முன்னர் Twitter என்று அழைக்கப்பட்ட சமூக ஊடகமான X தளத்தில் சில பதிவுகள் வாக்குச் சீட்டில் முறைகேடு ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிக்கு பேனாவைக் கொண்டு வருமாறு ஊக்குவித்துள்ளன.
அத்துடன் பென்சிலால் அடையாளமிடப்படும் போது அது சேதப்படவோ அல்லது அழிவடையவோ வாய்ப்புள்ளதாகவும் அதனால் குறித்த வாக்குச் சீட்டுக்கள் கணக்கெடுக்கப்படாது என்றும் ஒரு வகையான வதந்திகள் பரப்பப்படுகின்றது. மேற்போன்ற கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என நிராகரித்துள்ள Elections Canada, வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடியில் black-lead பென்சில் வழங்கப்படும் அதேபோன்று வாக்காளர்களால் அடையாளமிடுவதற்கு ஒரு பேனா அல்லது வேறு ஏதேனும் எழுது கருவியையும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
பேனாக்கள் பயன்படுத்தும்போது காய்ந்து போகலாம் அல்லது கசிவுகள் ஏற்பட்டு வாக்குச்சீட்டிற்கு சேதம் ஏற்படலாம் போன்ற காரணங்களுக்காகவே பென்சிலை பயன்படுத்துவதாக Elections Canada கூறுகிறது.
தேர்தல் நாளில் வாக்குகளை எண்ணும் நேரம் வரும்போது மட்டுமே வாக்குச்சீட்டுக்கள் திறக்கப்படுகின்றன இவை அனைத்தும் Elections Canada வின் தேர்தல் பணியாளர்களால் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே எண்ணப்படுகின்றன என்றும் Elections Canada வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.