Ajax பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய Gowryshankar Kathirkamanathan என்ற தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். May 02 ஆந் திகதி கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அறிக்கையொன்றில், Ajax பகுதியில் இளவயதுடைய ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக Hamilton பொலிஸாரிடமிருந்து April 30 ஆம் திகதி கிடைத்த தகவலை அடுத்து Durham பொலிஸாரால் விசாரணை தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை சந்தேக நபர் Hamilton இல் இருந்து Ajax க்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமியை பல நாட்கள் தனிமையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக பொலிஸாரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரான Gowryshankar மற்றும் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஆகிய இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்று கூறியுள்ள பொலிஸார் இருவருக்குமிடையிலான உறவு குறித்து மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை.