சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள 13 நகரங்களில் Canada Post ஊழியர்கள் பேரணிகளில் ஈடுபட்டனர். Canada Post ஊழியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் Crown corporation, தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்களுக்கிடையில் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் உடன்பாடுகள் எட்டப்படாத விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் சுமார் 55,000 தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொண்ட ஓர் பிரதானமான பொதுச்சேவையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இழுத்தடிப்பது வெட்கக்கேடானது என்று விசனம் வெளியிட்டனர். இதனிடையே போராட்டங்களின் போது சில நகரங்களில் இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை புதிய உடன்பாடுகள் எட்டுவதை மேலும் தாமதப்படுத்தும் எனவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் வலியுறுத்தினர். தொழிலாளர் பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், அஞ்சல் ஊழியர்கள் தங்கள் சமூகங்களின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்றும் அவர்கள் கூறினார்கள். தபால் ஊழியர்கள் பெரும்பாலும் அஞ்சல் மற்றும் பொதிகளை விநியோகிப்பதைத் தாண்டி இந்த நாட்டின் நலன்களில் பல வழிகளில் பங்களிக்கின்றார்கள்.
Canada Post, தொழிற்சங்கத்திற்கு தனது இறுதி சலுகையாக கட்டாய மேலதிக நேர வேலையை முடிவிற்கு கொண்டுவருதல் மற்றும் $1,000 வரை ஊக்குவிப்பு கொடுப்பனவிற்கு (bonus) கையொப்பமிடுதல் போன்றவற்றை வழங்கினாலும், நான்கு ஆண்டுகளுக்கு 14 சதவீத ஒட்டுமொத்த சம்பள உயர்வு மற்றும் வார இறுதி நாட்களில் பகுதிநேர ஊழியர்களுக்கான திட்டம் என்பன பேச்சுவார்த்தையின் பிரதான தடைகளாக அமைந்துள்ளன.
May 23 ஆம் திகதி தொடக்கம் சட்டப்பூர்வ வேலை என்ற தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் Canada Post ஊழியர்கள் சங்கம் தொடர்ந்தும் உறுப்பினர்கள் மேலதிக நேரம் வேலை செய்வதைத் தடை செய்துள்ளது.
