அண்மையில் சீன உயரதிகாரி ஒருவருடனான சந்திப்பை தொடர்ந்து கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளை ஒழுங்குபடுத்த பிரதமர் Mark Carney ஒப்புக்கொண்டுள்ளார். வியாழக்கிழமை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் Carney யும் சீன பிரதமர் Li Qiang உம் fentanyl நெருக்கடியைத் தீர்க்க இணைந்து பணியாற்றவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்து விவாதித்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதமர் Carney கனடாவின் கடல் உணவு, விவசாயம் மற்றும் canola உள்ளிட்ட பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். பிரதமராக பதவியேற்ற பின்னர் சீனத் தலைமையுடன் Carney பேசும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ளும் வகையில் சீனா, இந்தியா போன்ற நாடுகளுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் பொருளாார உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாகவே சீனாவுடனான பேச்சும் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க விரைவில் Carney அரசாங்கத்தைச் சந்திக்க சீனாவும் விருப்பம் கொண்டுள்ளதை கனடாவுக்கான சீனத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தை நோக்கும் உணர்வில் இருதரப்பு உறவுகளின் நிலையான முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், அவற்றை நல்ல மற்றும் நிலையான வளர்ச்சியின் பாதையில் கொண்டு வருவதற்கு ஒத்துழைக்கவும் சீனா கனடாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
