ஐரோப்பிய தலைவர்களுடன் Brussels இல் திங்களன்று பிரதமர் Mark Carney கையெழுத்திடும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தமானது ஐரோப்பா இதுவரை மேற்கொண்ட மூன்றாவது நாட்டுடனான மிகவும் பரந்த ஒப்பந்தங்களில் ஒன்றாக அமையும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐரோப்பாவின் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பு கட்டமைப்பில் கனடாவின் பங்கை வலுப்படுத்த இது ஒரு சிறந்த தருணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் Ukraine மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு கூட்டறிக்கை, அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய கனடா பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுதல் ஆகிய இரண்டு விடயங்கள் பிரதானமாக ஆராயப்படும் என ஐரோப்பிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் இராணுவ இயக்கம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் என்பவற்றுடன் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றில் கூட்டுப் பணிக்கான புதிய வழிகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவுடனான கனடாவின் உறவுகள் வரி மற்றும் அமெரிக்க மாநிலமாக மாற்றும் அச்சுறுத்தல்களின் போன்றவற்றால் பாதிக்கப்படுவதால், ஐரோப்பாவுடனான கனடாவின் உறவுகளை விரிவுபடுத்த விரும்புவதாக ஏற்கெனவே Carney தெளிவாகக் கூறியுள்ளார்.
ReArm Europe இல் இணைவதன் ஓர் அங்கமாகவே பிரதமர் June 9 அன்று கனடாவின் பாதுகாப்பு வரவுசெலவுத்திட்டத்தில் ஒரு பெரிய முதலீட்டை அறிவித்தார். அத்துடன் கனடா தனது அனைத்து பாதுகாப்புச் செலவுகளையும் இனி அமெரிக்காவிற்குள் செலுத்த முடியாது என்றும் Carney அடிக்கடி கூறி வருகின்றார்.
இந்த உச்சி மாநாட்டின் போது CETA எனப்படும் கனடா-ஐரோப்பா சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக அங்கீகரிப்பதற்கும் தலைவர்கள் உறுதியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. Brussels மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் NATO உச்சி மாநாட்டிற்காக Netherland இன் Hague நகருக்கு பயணமாகவுள்ளார்.