Iran மோதல் மற்றும் அதன் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால், நாட்டின் தலைநகரில் உள்ள வாகன சாரதிகள் இந்த வார இறுதியில் கூடுதல் சுமையைச் சந்திக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றையதினம் (சனிக்கிழமை) எரிபொருள் விலை ஆறு சதங்கள் உயர்ந்து, உள்ளூர் எரிபொருள் நிலையங்களில் சராசரி விலை லீட்டருக்கு 152.9 சதங்களாக இருக்கும் என்று En-Pro நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையிலிருந்து எரிபொருள் விலை 14 சதங்கள் உயர்ந்துள்ளது. இந்த அண்மைய உயர்வையும் சேர்த்தால், ஒரே வாரத்தில் விலை 20 சதங்கள் வரை அதிகரித்துள்ளது. இது 15 சதவீத உயர்வாகும்.
அமெரிக்காவிலும் எரிபொருள் விலை மேலும் 7 சதங்கள் உயர்ந்து, சராசரியாக ஒரு கலன் $3.32 ஆக அதிகரித்துள்ளதாக AAA அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீத விலையேற்றமாகும்.
Iran உடனான போர் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை 6.8 சதவீதம் உயர்ந்து ஒரு பரல் $86.57 ஆக அதிகரித்தது.
Hormuz நீரிணையில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, அங்கு எண்ணெய் விநியோகம் வழமைக்கு திரும்புவதைப் பொறுத்தே எண்ணெய் விலைகள் அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் எண்ணெய்ப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு, Iran மற்றும் Oman இடையே அமைந்துள்ள இந்த நீரிணையின் வழியாகவே செல்வதாகக் கூறப்படுகிறது.
