Alberta முதலமைச்சர் Danielle Smith இன் அரசாங்கத்திற்கு பழங்குடி மக்களுடன் கலந்தாலோசிக்கும் கடமை இருப்பதாக தெரிவித்து, Alberta நீதிபதி ஒருவர் பிரிவினைவாத வாக்கெடுப்பு மனுவை புதன்கிழமை தள்ளுபடி செய்துள்ளார்.
நீதிபதி Shaina Leonard, Alberta வின் பிரதம தேர்தல் அதிகாரி இந்த மனுவை ஒருபோதும் வெளியிட்டிருக்கக் கூடாது என்றும் கூறினார். புதன்கிழமையன்று இது குறித்துப் பேசிய Smith, நீதிபதி Leonard இன் முடிவு தவறானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட்டதோடு, தனது அரசாங்கம் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
”எங்கள் அரசாங்கம் Alberta கனடாவிலேயே நீடிப்பதை விரும்பினாலும், நீதிமன்றத்தின் இன்றைய முடிவானது 3,00,000-க்கும் அதிகமான Alberta மக்களின் மனுக்கள் சரிபார்க்கப்படுவதற்கான வாய்ப்பைப் பறிப்பதாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார்.
மாகாணத்தின் பொதுவாக்கெடுப்பு செயல்முறை மற்றும் பிரிவினைவாதிகள் அதைப் பயன்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று பல பழங்குடி மக்களின் வழக்கறிஞர்கள் கடந்த மாதம் வாதிட்டனர். ஏனெனில் இதில் பூர்வீகக் குடிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அத்துடன், கனடாவிலிருந்து பிரிந்து செல்வது ஒப்பந்த உரிமைகளை மீறுவதாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரதம தேர்தல் அதிகாரி December 8-ம் திகதி அவர்களின் முதல் முன்மொழிவை நிராகரித்ததால், பிரிவினைவாதிகள் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதித்திருக்கக் கூடாது என்று Leonard கூறினார். அந்தச் சட்டத்திருத்தம் மூன்று நாட்களுக்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தது.
”திருத்தங்கள் அமுலுக்கு வந்தபோது முதல் முன்மொழிவு நிலுவையில் இல்லை. அது ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு வந்துவிட்டது,” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
