தொழிலாளர் போராட்டங்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், தொழிற்சங்கம் தனது வாக்குப்பதிவு முடிவுகளை இன்று வெளியிடவுள்ளது. இதனடிப்படையில் தபால் துறை ஊழியர்களுக்கு ஒரு புதிய தற்காலிக ஒப்பந்தம் கிடைத்துள்ளதா என்பது பற்றிய விபரமும் இதன்மூலம் இன்று தெரியவரவுள்ளது.
கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 55,000 உறுப்பினர்கள், ஐந்து ஆண்டுகால ஒப்பந்தம் ஒன்றின் மீது April 20 அன்று வாக்கெடுப்பைத் தொடங்கினர். இந்த ஒப்பந்தத்தில் முதல் இரண்டு ஆண்டுகளில் முறையே 6.5 சதவீதம் மற்றும் 3 சதவீதம் சம்பள அதிகரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
Canada Post நிறுவனமும் தொழிற்சங்கமும் சம்பளங்கள் மற்றும் தபால் சேவையில் கொண்டுவரப்படும் கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக நீண்டகாலமாகவே விவாதித்து வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை செயல்முறையின் போது தொழிலாளர்கள் பல சந்தர்ப்பங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான இந்த வாக்குப்பதிவு நடைபெறும் வேளையில், வேலைநிறுத்தங்களிலோ அல்லது நிறுவன முடக்கல்களிலோ ஈடுபடுவதில்லை என இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும், இந்த தற்காலிக ஒப்பந்தத்தை ஊழியர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதா என்பது குறித்தும் அவர்கள் இந்த வாக்குப்பதிவு மூலம் தங்களது முடிவை அறிவித்து வருகின்றனர்.
இந்த முன்மொழியப்பட்ட கூட்டு ஒப்பந்தம் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறி, தொழிற்சங்க சபையின் சுமார் 60 சதவீதத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களின் உரிமைகளையும் இழப்பீடுகளையும் குறைப்பதாக வாதிட்டு, இதனை நிராகரிக்குமாறு தொழிற்சங்கத்தின் தலைவர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், தபால் சேவை நிறுவனம் தனது தொடர்ச்சியான நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வரிக்கு முன் $205 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கடந்த வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
