இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் நான்கு கனேடியர்கள் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
சீனாவின் மரண தண்டனையை கனடா கடுமையாக கண்டிப்பதுடன் இது மீளமுடியாத துயரம் என்றும் அடிப்படை மனித கௌரவத்திற்கே இழுக்கானது என்றும் Global Affairs Canada அறிக்கையொன்றின் மூலம் விமர்சித்துள்ளது.
இவ்வாறான நபர்களுக்கு சிரேஷ்ட மட்டங்களில் உள்ளவர்கள் கருணை காட்டவேண்டும் என கனடா பலமுறை அழுத்தம் கொடுத்துள்ளது. எல்லா இடங்களிலும் மரண தண்டனையைப் அமுல்ப்படுத்தப்படுவதையும் கனடா எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவுள்ளதாக கூறும் Global Affairs Canada மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. மேலும், இவ்வாறான இக்கட்டான நேரத்தில் ஊடகங்களும் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள சீன தூதரகம் கனேடிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உறுதியான மற்றும் போதிய ஆதாரங்களையும் கொண்டவை எனவும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் எந்தவித விட்டுக்கொடுப்புக்களையும் செய்யமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சீனாவின் சட்டத்தின் ஆட்சியையும் நீதித்துறையின் இறையாண்மையையும் மதித்து கனடா பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் சீன அரசாங்கம் மேலும் கோரியுள்ளது.