இன்று தொடக்கம் அமுலுக்கு வரவிருக்கும் கனேடிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிரான கனடாவின் 155 பில்லியன் பெறுமதியான பதில் வரியில் உடனடியாக 30 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களுக்கான வரிகள் விதிக்கப்படும் எனவும் மீதமுள்ள 125 பில்லியன் டொலர் வரிகளும் 21 நாட்களின் பின்னர் விதிக்கப்படும் எனவும் பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வரிவிதிப்புகளுடன் கூடிய வர்த்தக நடவடிக்கைகளை திரும்பப் பெறாவிட்டால், கனடாவின் பதில் கட்டணங்கள் அமுலில் இருப்பதுடன் கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேச மட்டங்கள் வரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ப்படும் என Trudeau கூறினார். கனடா தனது தொழிலாளர்கள், பொருளாதாரம், தமது தொழில் போன்றவற்றுக்காக தொடர்ந்தும் உறுதியாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கனடா மற்றும் மெக்சிக்கோ மீதான வரிகள் குறித்து ஜனாதிபதி Trump திங்களன்று பேசும்போது கார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளையும் அமெரிக்காவிற்குள் நிறுவுவதே வரிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரே வழி என்றார்.
எல்லைகள் ஊடாக தொடர்சியாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிவரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த கனடா இடைவிடாமல் உழைத்து வருவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே 1.3 பில்லியன் எல்லைத் திட்டத்தை வகுத்து செயற்படுத்தி வருவதாகவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரிகள் அமுலுக்கு வந்தால் Ottawa முன்னர் அறிவித்த பழிவாங்கும் வரியை அறவிடும், கனடா -அமெரிக்கா இடையேயான வெற்றிகரமான வர்த்தக உறவை சீர்குலைக்கும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலைகளை இழக்க நேரிடும் போன்ற பாதிப்புக்கள் கனேடியத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
Ontario மாகாணமும் அமெரிக்க மதுபானங்களை நீக்குதல் மற்றும் இணைய சேவை தொடர்பான Elon Musk இன் SpaceX உடனான $100 மில்லியன் ஒப்பந்தத்தை முறித்தல் மற்றும் மின்சாரத்தை துண்டித்தல் போன்றவற்றினூடாக தனது பதிலடியை கொடுக்கும் என்று Doug Ford கூறியுள்ளார்.